தாலுகா அரசு மருத்துவமனையில் டாக்டர் பணியிடத்தை நிரப்ப கோரிக்கை
புவனகிரி : புவனகிரி தாலுகா மருத்துவமனையில் இரவு பணி மேற்கொள்ளும் வகையில் டாக்டர் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புவனகிரியில் தாலுகா அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு புவனகிரி சுற்றுப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.இம்மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதிகள் மற்றும் இரவு நேர பணியில் டாக்டர் நியமிக்கப்படாததால் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டுள்ளது.இதனால், இரவு நேரங்களில் சிகிச்சைக்காக வருபவர்களை சிதம்பரம் மற்றும் கடலுார் உள்ளிட்ட ஊர்களுக்கு அனுப்பும் அவலம் நீடிக்கிறது.இதனால் கூலித் தொழிலாளிகள் மற்றும் கிராமங்களில் இருந்து வரும் பலரும் இரவு நேரத்தில் பஸ் இல்லாமலும், அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் வசதி இல்லாமலும் அல்லாடி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி தாலுகா தலைமை மருத்துமனையில் 24 மணி நேரமும் பணியாற்றும் நிலையில், டாக்டர் பணியிடத்தை நிரப்ப வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், கோரிக்கை குறித்து முதல்வர், துணை முதல்வர் மற்றும் துறை அதிகாரிகளுக்கு பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.