சம்பளம் வழங்காததை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை
கடலுார் : சம்பளம் வழங்காததை கண்டித்து பெண்ணையாறு ரோடு மாநகராட்சி நல மைய அலுவலகத்தை பெண் துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலுார் மாநராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. நாள்தோறும் குப்பைகளை அகற்ற தனியார் துப்புரவு தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். தனியார் நிறுவனம் சார்பில் ஒப்பந்த துப்பரவு பணியாளர்கள் மூலம் பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக சம்பளம் மற்றும் பி.எப்., பணம் பற்றி எந்த தகவலும் இல்லாததால் துப்புரவு பணியாளர்கள் நேற்று மாநராட்சி நல மைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒவ்வொரு முறையும் போராட்டம் நடத்தும் போதும், பேச்சுவார்த்தை நடத்தி சம்பளம் வழங்குவதாக அறிவிக்கின்றனர். ஆனால் அதன்படி நிறைவேற்றுவதில்லை என காட்டமாக பேசினர். தகவலறிந்த மாநகர நல அலுவலர் பரிதாவாணி, துப்புரவு தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் சம்பளம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.