சிதம்பரத்தில் சி.என்.ஜி., காஸ் தட்டுப்பாடு
சிதம்பரம் : சிதம்பரத்தில் சி.என்.ஜி., காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அதன் மூலம் இயக்கப்படும் ஆட்டோ டிரைவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.வாகனங்களில், பெட்ரோல் பயன்பாட்டிற்கு மாற்றாக இயற்கை அழுத்த எரிவாயு (சி.என்.ஜி) காஸ் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்த வகை வாகனங்களும் அதிகரித்து வருகின்றன.கடலுார் மாவட்டம் சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் சி.என்.ஜி., காஸ் மூலம் சுமார் 500க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சி.என்.ஜி., காஸ் நிரப்ப, சிதம்பரம் - சீர்காழி பைபாஸ் சாலையில் அம்மன் கோவில் அருகே பங்க் உள்ளது. நேற்று இந்த பங்கில் காஸ் நிரப்புவதற்கா ஏராளமான ஆட்டோக்கள் படையெடுத்து வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்தன.இதுகுறித்து ஆட்டோ டிரைவர்கள் கூறுகையில் 'கடந்த ஒரு மாதமாகவே சி.என்.ஜி., காஸ் சப்ளை சரிவர வழங்கப்படவில்லை. இதனால் காஸ் நிரப்ப நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. சிதம்பரம் பகுதியில் கூடுதல் சி.என்.ஜி., எரிபொருள் பங்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்தனர்.