மார்க்கெட் கமிட்டி அமைக்க நடவடிக்கை... தேவை: பெண்ணாடம் விவசாயிகள் எதிர்பார்ப்பு
பெண்ணாடம்: பெண்ணாடத்தில் மார்க்கெட் கமிட்டி அமைக்க வேண்டும் என 30 கிராம விவசாயிகள், கோரிக்கை விடுத்துள்ளனர்.மாவட்டத்தில் பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள திருமலை அகரம், இறையூர், எடையூர், கோவிலுார், சவுந்திர சோழபுரம், செம்பேரி, கிளிமங்கலம், மோசட்டை, குறுக்கத்தஞ்சேரி, நந்தப்பாடி, வெண்கரும்பூர், முருகன்குடி, துறையூர், சின்னகொசப்பள்ளம், பெரியகொசப்பள்ளம், இருளம்பட்டு, மாளிகைக்கோட்டம், பாசிக்குளம், பெலாந்துறை, கணபதிகுறிச்சி உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1 லட்சம் ஏக்கர் பரப்பில் விளைநிலங்கள் உள்ளன.இதில், மோட்டார் பாசனம் மூலம் சம்பா, குறுவை ஆகிய இரு பட்டங்களில் நெல்லும், மானாவாரி பட்டத்தில் மக்காசோளம், பருத்தி, உளுந்து, வரகு, வேர்க்கடலை, சோளம், கம்பு, எள், கேழ்வரகு உள்ளிட்ட தானியங்களையும் விவசாயிகள் பயிரிடுகின்றனர்.அறுவடை செய்யும் நெல் உட்பட மானாவாரி விளை பொருட்களை விற்க 20 கி.மீ., துாரமுள்ள விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டிக்கும், 18 கி.மீ., துாரமுள்ள திட்டக்குடி மார்க்கெட் கமிட்டிக்கும் எடுத்துச் செல்கின்றனர். இதனால், கால விரயம், கூடுதல் செலவு ஏற்படுகிறது. இதனை பயன்படுத்தி நெல் அறுவடை நேரங்களில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகள் உள்ளூர் இடைத்தரகர்கள் மூலம் நேரடியாக வயல்களுக்கு சென்று விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்கின்றனர். அப்போது விலை குறைவு உட்பட பல பிரச்னைகளை விவசாயிகள் சந்திக்க வேண்டிய சூழல் உள்ளது. சில வியாபாரிகள், விவசாயிகளிடம் நடவு செய்யும் நேரங்களில் விதை நெல், இடுபொருட்கள் என வாங்கிக் கொடுத்து, அந்த தொகைக்கேற்ப அறுவடை காலங்களில் வட்டி கணக்கீடு செய்து நெல் உட்பட விளைபொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இதனால் விவசாயிகள் அதிக செலவு செய்தும், அறுவடை நேரங்களில் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்று ஏமாறுவது வாடிக்கையாக உள்ளது. எனவே, பெண்ணாடத்தில் மார்க்கெட் கமிட்டி அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
அமைச்சர்கள்
கண்டு கொள்வார்களா திட்டக்குடி சட்டசபை தொகுதியில் பெண்ணாடம் பேரூராட்சியாகவும், குறுவட்ட தலைமையிடமாகவும் உள்ளது. சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் மார்க்கெட் கமிட்டி அமைத்தால் இடைத்தரகர்களின்றி விளைபொருட்களை விற்று விவசாயிகள் முன்னேற்றம் அடைவர். அதற்கு மாவட்டத்தில் உள்ள அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.