பணி துவங்காவிட்டால் டெண்டர் ரத்து: கமிஷனர் எச்சரிக்கை
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சி கூட்டம் நடந்தது. சேர்மன் ஜெயந்தி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கிரிஜா, கமிஷனர் கிருஷ்ணராஜன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். நெல்லிக்குப்பம் நகரத்தை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சேர்மன் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது. கவுன்சிலர்கள் பேசியதாவது: ஜெயபிரபா (தி.மு.க): எனது வார்டில் என்ன பணி நடக்கிறது. யார் டெண்டர் எடுத்தனர் என்ற விபரங்கள் கூட தெரியவில்லை. கவுன்சிலர்களுக்கு அதிகாரிகள் தகவல் அளிக்க வேண்டும். முத்தமிழன் (தி.மு.க): திட்டப் பணிகளுக்கான டெண்டர் விவரங்களை தீர்மானமாக கொண்டு வருவதில்லை. கமிஷனர்: திட்ட பணிகளுக்கான டெண்டர் விபரங்களை தீர்மானமாக வைக்க வேண்டியதில்லை என்ற அரசாணையை தரு கிறோம். அனைத்து டெண்டர்கள் விபரங்களும் ஆன் லைனில் வழங்கப்படுகிறது. பாரூக் உசேன்(சுயே); ஆலை ரோட்டில் புதிய கடை கட்ட பள்ளம் தோண்டி 6 மாதமாகியும் பணி நடக்கவில்லை. கமிஷனர்: இது தொடர்பாக ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளோம். பணியை துவங்காவிட்டால் டெண்டர் ரத்து செய்யப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.