சேறும், சகதியுமான சாலை கிராம மக்கள் கடும் அவதி
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த விளக்கப்பாடி கிராமத்தில் சாலை சேறும், சகதியுமாக உள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சேத்தியாத்தோப்பு அடுத்த விளக்கப்பாடி கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தார்சாலை போடப்பட்டது. தற்போது சாலை முழுவதும் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குறுவை நெல் அறுவடை பணிகள் நடந்து வரும் நிலையில் நிலத்தில் இருந்து சேற்றுடன் வரும் டிராக்டர்களில் இருந்து விழும் சேற்று மண் சாலை முழுதும் பரவிக் கிடக்கிறது. இதற்கிடையே, நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் வழுக்கி விழுந்து காயமடையும் சம்பவம் அரங்கேறுகிறது. பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.