விஸ்வநாதபுரம் தடுப்பணையில் வழிந்தோடும் தண்ணீர்
நெல்லிக்குப்பம் : விஸ்வநாதபுரம் பெண்ணையாற்றில் தடுப்பணையில் தண்ணீர் வழிந்தோடுகிறது. நெல்லிக்குப்பம் அடுத்த விஸ்வநாதபுரத்தை யொட்டி பெண்ணையாறு உள்ளது. இப்பகுதி மக்கள் விவசாயத்தை நம்பியே உள்ளனர். ஆற்றில் தண்ணீர் வந்தால் கூட தேங்கி நிற்பதற்கு வழியில்லாததால் அப்படியே கடலில் கலந்து விடும். இதனால் ஆற்றில் தண்ணீர் வந்தால் கூட விவசாயத்துக்கு பயன்படாத நிலை இருந்தது. இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் 26 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டது. தற்போது சாத்தனுார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தடுப்பணையை தாண்டி தண்ணீர் வழிந்தோடுகிறது. இதை பார்த்து ரசிக்க ஏராளமான மக்கள் கூடுகின்றனர். ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. இதே போன்று, நெல்லிக்குப்பம், வான்பாக்கம், முள்ளிகிராம்பட்டு பகுதிகளில் பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டினால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.