வெலிங்டன் வாய்க்கால் துார்வாரும் பணி தீவிரம்
பெண்ணாடம்: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக, திருமலை அகரம் வழியே செல்லும் வெலிங்டன் பாசன கிளை வாய்க்கால் துார்வாரும் பணி நடந்து வருகிறது. பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள திருமலை அகரம், அரியராவி, பூவனுார், செம்பேரி, இருளம்பட்டு, மாளிகைக் கோட்டம், கொசப்பள் ளம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள், திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் வெலிங்டன் ஏரி பாசன கிளை வாய்க்கால் மூலம் வரும் தண்ணீரை பயன்படுத்தி நெல், கரும்பு, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்கின்றனர். அதில், திருமலை அகரத்தில் இருந்து பெ.பூவனுார் செல்லும் பாசன வாய்க்காலில் நாணல், சம்பு, கோரை புற்கள் அதிகளவில் மண்டியுள்ளன. இதனால் மழைக்காலங்களில் வாய்க்காலில் தண்ணீர் வரத்து அதிகரித்து கரைகள் உடையும் அபாயம் உள்ளது. அதைத் தொடர்ந்து, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக நேற்று, திருமலை அகரம் - ஓ.கீரனுார் வரையிலான பாசன கிளை வாய்க்கால் பொக்லைன் உதவியுடன் துார்வாரும் பணி தீவிரமாக நடக்கிறது.