பொதுமக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும்
பாப்பிரெட்டிப்பட்டி : ''பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதியில் பொதுமக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும்,'' என, ஓட்டு சேகரிப்பின் போது, தி.மு.க., வேட்பாளர் பழனியப்பன் உறுதியளித்தார்.தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி, தி.மு.க., வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் நேற்று பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு மற்றும் கடத்துார் கிழக்கு ஒன்றியங்களில் உள்ள பையர்நத்தம், மெனசி, பூதநத்தம், ஆலாபுரம், கோபாலபுரம், கவுண்டம்பட்டி, தென்கரைகோட்டை உள்ளிட்ட, 13 ஊராட்சிகளில் உள்ள, 45 கிராமங்களில் பொதுமக்களையும், வயல்களில் வேளாண் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பெண்களையும் சந்தித்து ஓட்டு சேகரித்தார். அப்போது அவர், கூறுகையில், ''மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் உள்ளிட்ட பிரச்னைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும். தி.மு.க., அரசால் கடந்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்ட பணிகள் குறித்து, பொதுமக்களுடையே விளக்கி பேசினார். அடுத்து, ஐந்து ஆண்டுகளில், தி.மு.க., ஆட்சியின் போது மகளிர் உரிமை தொகை, 2,000 ரூபாயாக உயர்த்தப்படும். 8,000 ரூபாய் மதிப்பிலான, 'கூப்பன்' ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படும். அதை பயன்படுத்தி, உங்களுக்கு அருகில் உள்ள, ஷோரூம்களுக்கு சென்று பிடித்தமான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். எனவே அனைவரும், உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு போட்டு, என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்,'' என்றார்.பிரசாரத்தின் போது தொகுதி பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி, ஒன்றிய செயலாளர்கள் சரவணன், நெப்போலியன், வி.சி., மாவட்ட செயலாளர் சென்னகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.