மகன்களுடன் சேர்த்து வைக்க 90 வயது தாய் தர்ணா
பாலக்கோடு : தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, பூத்துப்பட்டியை சேர்ந்தவர் பாப்பாத்தியம்மாள், 90; இவரது மகன்கள் முருகேசன், கோவிந்தன்; மகள் வள்ளியம்மா. மூவரும் திருமணமாகி தனித்தனியே வசிக்கின்றனர். கணவர் 50 ஆண்டுக்கு முன் இறந்து விட்டதால், பூத்துப்பட்டியில் பாப்பாத்தியம்மாள் தனியாக வாழ்ந்தார். ஐந்து ஆண்டுகளாக வயது மூப்பால், மகன், மகளை நாடி சென்றார். மகன்கள் மற்றும் மகள் வீட்டில் சிறிது காலத்தை கழித்த நிலையில், இளைய மகன் கோவிந்தராஜ், தாயை கவனிக்க முடியாமல், பூத்துப்பட்டி சாலையில் இரவு நேரத்தில், ஆட்டோவில் கொண்டு வந்து, சாலையோரம் கடந்த மாதம் இறக்கி விட்டு சென்றார். இரவு முழுதும் தவித்த மூதாட்டியை, அப்பகுதியினர் ஒரு மாதமாக பராமரித்தனர். தன்னை மகன்களிடம் சேர்த்து வைக்க மூதாட்டி கேட்டதால், மகேந்திரமங்கலம் போலீசில், ஊர் மக்கள் புகாரளித்தனர்.போலீசார் நடவடிக்கை எடுக்காததால், வெள்ளிச்சந்தை நான்குரோட்டில் கட்டிலில் படுத்தபடி, மூதாட்டி நேற்று தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் நடவடிக்கை எடுப்பதாக, மூதாட்டியிடம் உறுதியளித்தனர்.