உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரூர் மலைக்கிராமங்களில் கள்ளத்துப்பாக்கி புழக்கம் அதிகரிப்பு

அரூர் மலைக்கிராமங்களில் கள்ளத்துப்பாக்கி புழக்கம் அதிகரிப்பு

அரூர் அரூர் பகுதி மலைக்கிராமங்களில் கள்ளத்துப்பாக்கிகள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம், அரூர் வருவாய்கோட்டத்தில், மொரப்பூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, அரூர் என, 4 வனச்சரகங்கள் உள்ளன. இவற்றையொட்டி, சித்தேரி, கோட்டப்பட்டி, சிட்லிங், வாச்சாத்தி, தீர்த்தமலை, நரிப்பள்ளி உள்ளிட்ட, 60க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இங்குள்ள காடுகளில், மான், காட்டுப்பன்றி, முயல், காட்டெருமை அதிகளவில் உள்ளன. இவற்றை வேட்டையாட கள்ளத்தனமாக, நாட்டுத்துப்பாக்கிகளை தயார் செய்து, அதன் மூலம் விலங்குகளை வேட்டையாடும் சம்பவங்கள் அதிகளவில் நடக்கின்றன. சில நேரங்களில் மட்டும், உயரதிகாரிகளின் உத்தரவின்படி, பெயரளவுக்கு வனத்துறை மற்றும் போலீசார் சோதனை செய்து, கள்ளத்தனமாக துப்பாக்கி வைத்திருந்ததாக சிலரை மட்டும் கணக்குக்காக கைது செய்கின்றனர். அரூர் வனப்பகுதியில் வசிக்கும் விலங்குகளை, கள்ளத்துப்பாக்கிகள் மூலம் வேட்டையாடியதாக கடந்த, 2024ம் ஆண்டு மட்டும், 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், சித்தேரியிலுள்ள மண்ணுார் கிராமத்தில் வேட்டைக்கு செல்லும் போது ஒருவரும், கீழானுாரில், நிலத்தகராறில் ஒருவரும், கள்ளத்துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர். கடந்த, 25ல் கலசப்பாடியை சேர்ந்த கிருஷ்ணன், 51, வனப்பகுதியில் நாட்டுத்துப்பாக்கியை சுத்தம் செய்தபோது, தவறுதலாக வெடித்ததில் படுகாயமடைந்தார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: அரூர் பகுதி காடுகளில், தினமும் இரவில் கள்ளத்துப்பாக்கி மூலம் வேட்டையாடும் சம்பவங்கள் நடந்து கொண்டே தான் உள்ளது. இவற்றை வனத்துறையினரும், போலீசாரும் கண்டுகொள்ளாததால், வன வேட்டை சர்வசாதாரணமாக நடக்கிறது. எனவே, அரூரிலுள்ள மலைக்கிராமங்களில் போலீஸ் மற்றும் வனத்துறையினர் இணைந்து, திடீர் சோதனை நடத்தி, நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்ய வேண்டும்.இவ்வாறு கூறினர்.இது குறித்து, அரூர் டி.எஸ்.பி., கரிகால் பாரிசங்கர் கூறுகையில், ''மலைக்கிராமங்களில் கள்ளத்துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பது குறித்து, வனத்துறையினருடன் இணைந்து அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகிறோம். வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளையும் கண்காணித்து வருகிறோம். கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமையில் கூட, சிட்லிங், வாச்சாத்தி, கலசப்பாடி, வத்தல்மலை ஆகிய மலைக்கிராமங்களில் சோதனை மேற்கொண்டோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை