சூரிய மின் ஆற்றலை அதிகளவில் பயன்படுத்த மக்களுக்கு அறிவுரை
தர்மபுரி: தர்மபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சுமதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: பகல் நேரங்களில் இலவசமாக கிடைக்கும் புதுப்பிக்கக்கூடிய இயற்கை வளமான சூரிய மின் ஆற்றலை பயன்படுத்தி, உற்பத்தி செய்யப் படும் சூரிய ஒளி மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்த வேண்டும். இதன் மூலம், பசுமை ஆற்றல் திட்டங்களை ஊக்குவிப்பதோடு மற்ற வளங்களை கொண்டு, மின் ஆற்றலை தயாரிக்கும் போது, ஏற்படும் மாசுபாட்டின் அளவு குறையும். நம் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் முன்னேற்றிடும் நோக்கில், பகலில் அதிகளவில் தயாரிக்கப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்த அனைத்து விவசாயிகளும் முன்வர வேண்டும். இயன்ற வரை தங்களது விவசாய மோட்டார்களை பகல் நேரங்களில் உபயோகப்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.