உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பறக்கும் படை சோதனையில் வெள்ளி பொருட்கள் பறிமுதல்

பறக்கும் படை சோதனையில் வெள்ளி பொருட்கள் பறிமுதல்

பாலக்கோடு: பாலக்கோடு அருகே, தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த, 2.51 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் உதவி பொறியாளர் சாம்ராஜ் தலைமையிலான, தேர்தல் கண்காணிப்பு குழுவினர் நேற்று காலை, 10:15 மணிக்கு காடுவெட்டி சோதனைச்சாவடி அருகே, வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த தர்மபுரி மாவட்டம், மாக்கனுாரை சேர்ந்த வீரமணி, 38, என்பவர் ஓட்டி வந்த மாருதி சுசுகி டிசையர் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட, 1.52 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அதேபோல் காலை, 10:50 மணிக்கு கொலசனஹள்ளி மேம்பாலம் அருகே, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டையை சேர்ந்த ரூபா, 50, என்பவர் ஓட்டி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட, 300 கிராம் எடை கொண்ட, 29 எண்ணிக்கையிலான வெள்ளி பரிசு பொருட்களை பறிமுதல் செய்தனர். மாலை, 3:00 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியை சேர்ந்த நாராயணசாமி, 55, என்பவர் ஆவணங்களின்றி கொண்டு வந்த, 99,000 ரூபாய் பறிமுதல் செய்தனர். இவை அனைத்தையும் பாலக்கோடு சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர். ரூ.44.07 லட்சம் பறிமுதல்ஓசூர் அருகே ஜீமங்கலம் பகுதியில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், காரில் எடுத்துச்சென்ற, 41.5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் வந்த கர்நாடகா மாநிலம், மாலுாரை சேர்ந்த மஞ்சுநாத், 35, என்பவர், குடிசாதனப்பள்ளியை சேர்ந்த உறவினரிடம் கடனாக வாங்கி செல்வதாக தெரிவித்தார். உரிய ஆவணம் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.ஓசூர் அருகே உள்ள திருச்சிப்பள்ளியில் நடந்த தேர்தல் பறக்கும் படை வாகனச்சோதனையில், சானமாவு கிராமத்தை சேர்ந்த வேணுகோபால் என்பவர் உரிய ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற, 2.57 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை