அரசு பள்ளிக்கு நிலதானம் செய்தவர் இருக்க இடமின்றி 18 ஆண்டாக தவிப்பு
பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அடுத்த ரேகடஹள்ளி ஊராட்சி ஜாலிப்புதுாரைச் சேர்ந்தவர் முருகேசன், 63, கூலித்தொழிலாளி. இவர், 2006ல், ஜாலிப்புதுாரில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைய வேண்டி, தன், 80 சென்ட் விவசாய நிலத்தை தானமாக கொடுத்தார். அப்போது, அவருக்கு, 5 சென்ட் இடம், வேறு இடத்தில் அரசு சார்பில் கொடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால், இதுவரை வழங்கவில்லை. இதுகுறித்து, 18 ஆண்டுகளாக அதிகாரிகளிடம், 50க்கும் மேற்பட்ட மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.இது குறித்து, முருகேசன் கூறியதாவது:இக்கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி துவங்க, என்னிடமிருந்த, 80 சென்ட் நிலத்தையும் கொடுத்தேன். அப்போது அதிகாரிகள் வேறிடத்தில் உங்களுக்கு, 5 சென்ட் நிலத்தை கொடுப்பதாக கூறி, நிலத்தை பெற்றனர். ஆனால், இதுவரை வழங்கவில்லை. இருக்க இடமின்றி, ஆங்காங்கே தங்கி, பிழைப்பு நடத்தி வருகிறேன். வீடு இல்லாததால், எனக்கு திருமணமும் ஆகவில்லை.அரசு புறம்போக்கு நிலங்கள், இப்பகுதியில் அதிகளவில் உள்ளன. அதில், குடிசை போடும் அளவிலாவது இடத்தை கொடுங்கள் என கேட்டு, 50க்கும் மேற்பட்ட முறை, முதல்வரின் தனிப்பிரிவு முதல், மாவட்ட கலெக்டர் வரை மனு கொடுத்தேன். ஆனால் இதுவரை, ஒரு முறை கூட யாரும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை.என் நிலத்தை தானமாக கொடுத்து விட்டு, இப்போது இடமின்றி, வாழ வழியின்றி, அலைந்து கொண்டுள்ளேன். அரசு, எனக்கு இலவசமாக வீட்டு மனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.