தேர்தல் விதிமுறை மீறிய தி.மு.க.,வினர் இருவர் கைது
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அருகே பூவத்தி அடுத்த மிட்டப்பள்ளி பஸ் ஸ்டாப் பகுதியில் கடந்த, 12ம் தேதி மதியம், 1:00 மணியளவில் சிலர் நின்றிருந்தனர். தேர்தல் பறக்கும் படையினர், விசாரித்தபோது, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே அங்கிருந்தவரை பிடித்து சோதனையிட்டதில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த, 23,500 ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரி பிரகாசம் தலைமையிலான அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். அவர்கள் புகார் படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், ஓட்டுக்கு பணம் கொடுக்க முயன்ற, தி.மு.க., பிரமுகர் சின்னதுரை, 50 என்பவரை கைது செய்தனர்.அதேபோல பறக்கும் படை அதிகாரி செந்தில் தலைமையிலான அதிகாரிகள் போச்சம்பள்ளி அருகே கெங்கவரம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு, தி.மு.க.,வின் இல்லத்தரசி திட்டத்தின், 8,000 ரூபாக்கான கூப்பனை போலியாக அச்சிட்டு, தி.மு.க., பிரமுகர் செங்குட்டுவன், 50, என்பவர், வாக்காளர்களிடம் கொடுத்து ஓட்டு கேட்டுள்ளார். அலுவலர்கள் புகார் படி, போச்சம்பள்ளி போலீசார், அவரை கைது செய்தனர்.