திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 3,24,894 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 40 நாட்களுக்கு மேலாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த நடவடிக்கை(எஸ்.ஐ.ஆர்.,) மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தேர்தல் அலுவலரான கலெக்டர் சரவணன் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
பழநி, ஒட்டன்சத்திரம், ஆத்துார், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், வேடசந்துார் ஆகிய 7 சட்டசபை தொகுதிகளில் எஸ்.ஐ.ஆர்., நடவடிக்கைக்கு முன் வெளியிடப்பட்டபட்டியலில் 19,34,447 பேர் இடம் பெற்றிருந்தனர். இந்த வாக்காளர்களுக்கான படிவங்கள் நவ. 4 முதல் வீடு வீடாக விநியோகிக்கும் பணி நடந்தது. 100 சதவீத படிவங்கள் விநியோகிக்கப்பட்ட நிலையில் 16,09,553 (83.20 சதவீதம்) படிவங்கள் திரும்ப பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேற்று வெளியிட்டப்பட்ட வரைவு வாக்காளர்கள் பட்டியில் 16,09,553 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இறப்பு, முகவரி மாற்றம், இரட்டைப் பதிவு, கண்டறிய முடியாதவர்கள் என 3,24,894 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 2301 ஓட்டுச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். வாக்காளர்கள் தங்களது பெயர் இடம்பெற்றுள்ளதை உறுதி செய்துகொள்ளலாம். elections.tn.gov.inஎன்ற தேர்தல் ஆணையத்தின் இணையதள முகவரியிலும் சரிபார்த்துக்கொள்ளலாம். மேலும் வாக்காளர்கள் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம் முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புவர்கள் ஜன.18 வரை விண்ணப்பிக்கலாம்.