ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்தாத அரசுபோக்குவரத்து பணியாளர் சம்மேளனம் கவலை
ஈரோடு:தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர் சம்மேளனம், ஓய்வு பெற்ற பணியாளர் சம்மேளனத்தின் ஈரோடு, திருப்பூர், கோவை மண்டலங்களின் பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நடந்தது.ஈரோடு மண்டல தலைவர் கலைமுருகுன் தலைமை வகித்தார். அமைப்பு செயலர் பன்னீர்செல்வம் வரவேற்றார். திருப்பூர் மண்டல தலைவர் இன்பசேகரன், சம்பத்குமார், உத்திரராஜன், பொன்னுசாமி உட்பட பலர் பேசினர்.பின், சம்மேளன மாநில பொது செயலாளர் பத்மநாபன், நிருபர்களிடம் கூறியதாவது: அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கான சம்பள பேச்சுவார்த்தை, 2023 மே மாதமே நடத்தி இருக்க வேண்டும். இன்னும் துவங்கவில்லை. தொழிற்சங்க தேர்தல், அங்கீகார தேர்தலை நடத்தி பேச்சுவார்த்தையை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் பலனில்லை.போக்குவரத்து துறையில் நிதி பற்றாக்குறை தொடர்கிறது. மின் துறையில், 1.37 லட்சம் கோடி இழப்பு இருக்கிறது என்கிறார்கள். ஆனால் அத்தனை சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. எங்களுக்கு சலுகை தாமதமாகிறது. ஆண்டு தோறும் போக்குவரத்து துறைக்கு நிதி ஒதுக்க வேண்டும். 'பே கமிஷன்'படி சம்பளத்தை அமலாக்க வேண்டும். அகவிலைப்படி பிரச்னையை, 100 நாட்களில் தீர்ப்பதாக எதிர்கட்சி தலைவராக ஸ்டாலின் கோவையில் தெரிவித்தார். முதல்வராகி நான்கு ஆண்டுகளாகியும், ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி வழங்கவில்லை. மாறாக மதுரை, சென்னை, டில்லி என மாறிமாறி நீதிமன்றத்துக்கு அரசு சென்று தாமதப்படுத்துகிறது.போக்குவரத்து தொழிலாளர்களுக்கான கமிட்டி, முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்திலேயே ஏற்படுத்தி, வழிமுறைகளை தெரிவித்துள்ளனர். அதை அமலாக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.