தபால் ஓட்டு போட 7,000 பேர் படிவம் சமர்ப்பிப்பு
ஈரோடு:சட்டசபை தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்ய, தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, தபால் ஓட்டளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் எட்டு தொகுதிகளில், 85 வயதுக்கு மேற்பட்டோர், 15,572 பேரும், மாற்றுத்திறனாளிகள், 12,098 பேர் என, 27,670 பேர் உள்ளனர். இவர்களில் தபால் ஓட்டளிக்க விருப்பமுள்ளோர், படிவம்-12டி வழங்கி, ஆவணங்கள், மொபைல்போன் எண்ணை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில் விண்ணப்பங்களை பெறும் பணியில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் கடந்த நான்கு நாட்களாக ஈடுபட்டனர். இதில், 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என, 7,000 பேர் தபால்ஓட்டளிக்க விருப்பம் தெரிவித்து, படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்துள்ளனர். மற்றவர்கள் ஓட்டுச்சாவடியில் வாக்களிப்பதாக தெரிவித்துள்ளனர்.இவர்களுக்கு தேர்தல் கமிஷன் அறிவிக்கும் நாளில், ஓட்டுச்சாவடி அலுவலர் மூலம் தபால் ஓட்டு செலுத்த விருப்பம் தெரிவித்தவர்களின் மொபைல் எண்ணுக்கு, நேரில் தபால் ஓட்டு பெறப்படும் நாள், நேரம் குறித்து தெரிவிக்கப்படும். இதுதவிர மாவட்டத்தில் தேர்தல் பணியில், அரசு ஊழியர், ஆசிரியர்கள், பிற துறையினர், நுண் பார்வையாளர், போலீசார் என, 11 ஆயிரம் பேர் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கும் தபால் ஓட்டு படிவம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்பித்ததும், தேர்தல் பயிற்சி நடக்கும் மையம் அல்லது சம்மந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில், தபால் ஓட்டளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று, தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.