அரசு பள்ளி முன்னேற்றத்துக்கு உதவ அழைப்பு
ஈரோடு, ஈரோட்டில், அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், சமூக பங்களிப்பு, தனிப்பட்ட பங்களிப்பை ஒருங்கிணைக்க, 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.கலெக்டர் கந்தசாமி, தலைமை வகித்து பேசியதாவது: இத்திட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பங்களிப்பை பொருள், பணம், களப்பணியாக வழங்கலாம். பெரு நிறுவனங்கள், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், முன்னாள் மாணவர்கள், தனி நபர்கள், அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த பங்களிக்கலாம். (https://nammaschool.tnschools.gov.in/#/) என்ற இணைய தளம் மூலம், மாநில அளவில் தங்களுக்கு விருப்பமான அரசு பள்ளியை தேர்வு செய்து, தேவைகளை பூர்த்தி செய்யலாம்.ஒவ்வொரு பள்ளிக்கான தேவைகளை பள்ளி மேலாண்மை குழு, தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்து, அதற்கான இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும். பள்ளிக்கு தேவையான லேப்டாப் உள்ளிட்ட உபகரணங்களும் வழங்கலாம். பங்களிப்பாளர்களுக்கு கல்வித்துறையால் பயனீட்டு சான்றிதழ், வரி விலக்கு, பாராட்டு சான்றுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு பேசினார்.திட்ட மேலாண்மை குழு உறுப்பினர் லுாக் அஸ்லாக்சன், சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் வெங்கடேசன், உதவி திட்ட அலுவலர் ரவிசந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாலகிருஷ்ணன், சென்னிமலை உட்பட பலர் பங்கேற்றனர்.