வெள்ளாட்டை அடித்து கொன்ற சிறுத்தை மலைக்குன்றில் பதுங்கியுள்ளதால் பீதி
புன்செய்புளியம்பட்டி:ஈரோடு மாவட்டம், விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறி, பெரிய கள்ளிப்பட்டி மலை குன்றில் பதுங்கி இருந்த, இரண்டு சிறுத்தைகள் கால்நடைகளை வேட்டையாடி வந்தது. சில மாதங்களுக்கு முன்பு, வனத்துறையினர் வைத்த கூண்டில் ஆண் சிறுத்தை சிக்கிய நிலையில் பெண் சிறுத்தை அதே மலைக்குன்றில் பதுங்கியுள்ளது.கடந்த வாரம் பெரிய கள்ளிப்பட்டி மணி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் புகுந்து, இரண்டு மாத கன்று குட்டியை அடித்து கொன்று மலை உச்சிக்கு சுற்றி துாக்கி சென்றது. இதையடுத்து, கன்று குட்டியின் உடலை துாக்கி வந்து வனத்துறையை கண்டித்து, அப்பகுதி மக்கள் சாலை மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில் நேற்று இரவு 8:00 மணியளவில், மாராயிபாளையம் ஊருக்குள் புகுந்த சிறுத்தை தங்கராஜ் என்பவர் தோட்டத்தில் புகுந்து வெள்ளாட்டை அடித்து கொன்றது. அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டு சிறுத்தையை விரட்டி அடித்தனர். தகவல் அறிந்த விவசாயிகள் சாலையில் திரண்டனர். வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை, 50க்கும் மேற்பட்ட ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை சிறுத்தை அடித்துக் கொன்றுள்ளது. கடந்த ஓராண்டாக, மலை குன்றில் பதுங்கியிருக்கும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.