காவிரி ஆற்றில் மூழ்கி மூவர் பலி
ஈரோடு: நாமக்கல் மாவட்டம், அவிநாசிபட்டியை சேர்ந்தவர் பெருமாள், 35. தறிப்பட்டறை தொழிலாளி. இவரது மனைவி பாரதி, 34. இவர்களின் மகன்கள் லகித், 14, சுஜித், 12. இவர்கள் அனைவரும், பாரதியின் தாய் ஊரான பரமத்தி வேலுார் சித்தம்பூண்டிக்கு சென்றனர். அங்கிருந்து, ஈரோடு மாவட்டம், பாசூர் காவிரி ஆற்றில் குளிக்க புறப்பட்டனர். இவர்களுடன், சித்தம்பூண்டியை சேர்ந்த பிரதீபா, 21, இவரது தோழி ஸ்ரீமதி ஆகியோரும் நேற்று, மதியம், 3:00 மணிக்கு சென்றனர். பிரதீபா, பாரதி, லகித், சுஜித் ஆகிய நால்வரும் குளித்தபோது, ஒன்றாக மூழ்கினர். அவர்களை காப்பாற்ற பெருமாள் ஆற்றில் குதித்தார். ஸ்ரீமதி கூச்சலிட்டதால், அங்கிருந்தவர்கள், நீரில் மூழ்கியவர்களை மீட்க முயன்றனர். ஆனால், இறந்த நிலையில் பெருமாள் மீட்கப்பட்டார். பாரதி, பிரதீபா மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தனர். லகித், சுஜித் இருவரும் மக்களால் மீட்கப்பட்டனர்.