| ADDED : மே 20, 2024 06:42 AM
கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான படகு சவாரி வசதியுடன் கூடிய குளத்தில் தண்ணீர் குறைந்துள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.மாவட்ட தலைநகரமாக உள்ள கள்ளக்குறிச்சியில் மக்களின் பொழுது போக்கிற்காக ஏமப்பேர் படகு சவாரி குளம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. ரூ.1.21 கோடி மதிப்பில் பொழுதுபோக்கு பூங்கா, சிறுவர்கள் நீச்சல் குளம், நடைபாதை ஆகிய வசதிகளுடன் புனரமைக்கப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.திரையரங்குகள் மட்டுமே பொழுது போக்கு அம்சமாக கொண்டிருந்த கள்ளக்குறிச்சி நகரப்பகுதி மக்கள் பலரும் விடுமுறை தினங்கள் மட்டுமின்றி தினமும் இந்த குளத்திற்கு சென்று வரத்துவங்கினர். நீச்சல் தொட்டியில் சிறுவர்கள் ஆனந்தமாய் விளையாடுவதும், பெரியவர்கள் படகு சவாரி சென்றும் மகிழ்ந்தனர்.ஆனால் இவ்வாண்டின் கோடை வெயிலின் உச்சத்தால் இந்த குளத்தில் நீர்மட்டம் படிப்படியாக குறையத்துவங்கி உள்ளது. நீச்சல் குளத்திலும் தண்ணீர் அளவு குறைந்து போய் உள்ளது. மேலும் படகு சவாரி குளத்திலும் தண்ணீர் குறைந்துபோனதால் சவாரி செய்யும் பகுதியின் பரப்பளவும் வெகுவாக குறைந்து போனதால் மக்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.