உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்படுமா?: சோமண்டார்குடி மக்கள் எதிர்பார்ப்பு

ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்படுமா?: சோமண்டார்குடி மக்கள் எதிர்பார்ப்பு

கள்ளக்குறிச்சி: சோமண்டார்குடி பகுதியில் கல்லுாரி மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு கோமுகி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சி அடுத்த சோமண்டார்குடி ஊராட்சியில் 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. சுற்று வட்டாரத்திலும் பல்வேறு கிராமங்கள் உள்ளது. பொதுமக்கள் பல்வேறு உபயோகங்களுக்கு கள்ளக்குறிச்சி நகருக்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர். பள்ளி, கல்லுாரி மாணவர்களும் அதிகளவில் வந்து செல்கின்றனர்.அப்பகுதி மக்கள் கள்ளக்குறிச்சி வந்து செல்ல குறுகிய வழியாக கோமுகி ஆற்றை கடந்து காரனுார் பஸ் நிறுத்தம் வழியாக செல்கின்றனர். இரு சக்கர வாகனங்கள் மற்றும் நடந்தும் ஆற்றை கடக்கின்றனர்.கரடு முரடாக உள்ள கோமுகி ஆற்றைக் கடக்கும் போது கடும் அவதிக்குள்ளாகின்றனர். பருவ மழையில் கோமுகி அணையிலிருந்து தண்ணீர் திறக்கும்போது, ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்லும். அத்தருணத்தில் மே.வன்னஞ்சூர், ரோடுமாந்துார் சாலை வழியாக நீண்ட துாரம் சுற்றிச் செல்கின்றனர். கோமுகி ஆற்றில் குறைவாக தண்ணீர் செல்லும் போது, நீண்ட துாரம் சுற்றி செல்ல சிரமப்பட்டு தண்ணீரிலும் ஆற்றை கடந்து செல்கின்றனர். சில நேரங்களில் ஆற்றில் இடுப்பளவு தண்ணீர் செல்லும் போதும், ஆபத்தினை உணராமல் கடும் சிரமங்களுக்கு இடையே சிலர் ஆற்றை கடக்கின்றனர்.அதுபோன்ற நேரத்தில், தண்ணீரில் அடித்து செல்லும் அபாயமும் உள்ளது. சோமண்டார்குடியில் கோமுகி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஆற்றின் ஓரம் கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இயங்கி வருகிறது. கல்லுாரிக்கு செல்வதற்கு பஸ் போக்குவரத்து இல்லாததால், காலை, மாலை நேரங்களில் கல்லுாரிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆற்றில் நீர் வரத்து இல்லாதபோது மோ.வன்னஞ்சூர், மோகூர், ரோடுமாமந்துார், வாணியந்தல், அகரகோட்டாலம், சிறுவங்கூர் உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சோமண்டார்குடி கிராமம் வழியாக ஆற்றைக் கடந்து கல்லுாரிக்குச் செல்கின்றனர். சோமண்டார்குடி கோமுகி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் பட்சத்தில், தனியார் மினி பஸ்கள், ஆட்டோக்கள் போன்ற வாகனங்களின் போக்குவரத்து அதிகரிக்க கூடும். இதனால் கல்லுாரி மாணவ, மாணவிகள் சிரமம் இன்றி சென்று வருவதற்கும் வாய்ப்பாக அமையும். எனவே, கிராம மக்கள் மற்றும் கல்லுாரி மாணவ மாணவிகளின் நலனைக் கருதி சோமண்டார்குடி கோமுகி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு கலெக்டர் பிரசாந்த் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை