உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தொழிற்சங்க கூட்டமைப்பினர் மறியல் 186 பெண்கள் உட்பட 608 பேர் கைது

தொழிற்சங்க கூட்டமைப்பினர் மறியல் 186 பெண்கள் உட்பட 608 பேர் கைது

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்க கூட்டமைப்பை சேர்ந்த 186 பெண்கள் உட்பட 608 பேரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி அஞ்சல் அலுவலகம் முன் நடந்த மறியல் போராட்டத்திற்கு, விவசாய தொழிலாளர் சங்க மாநில தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின்மணி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பெரியசாமி முன்னிலை வகித்தனர். தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை திரும்ப பெறுதல், விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை வழங்க சட்டம் இயற்றுதல், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 200 நாட்கள் வேலையும், கூலித்தொகை ரூ.600 வழங்குதல், அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்புதல், ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரபடுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 5 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கச்சேரி சாலையில் இருந்து அஞ்சல் அலுவலகம் வரை பேரணியாக நடந்து சென்று, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மறியலில் ஈடுபட்ட 12 பெண்கள் உட்பட 50 பேரை கைது செய்தனர்.அதேபோல், தொழிலாளர் முன்னேற்ற கூட்டமைப்பு உட்பட 5 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், கள்ளக்குறிச்சி இந்தியன் வங்கி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 105 பெண்கள் உட்பட 190 பேரை கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.உளுந்துார்பேட்டையில் மறியலில் ஈடுபட்ட 17 பெண்கள் உட்பட 110 பேர், சங்கராபுரத்தில் 20 பெண்கள் உட்பட 75 பேர், திருக்கோவிலுாரில் 50 பேர், திருநாவலுாரில் 9 பெண்கள் உட்பட 37 பேர், பகண்டைகூட்ரோட்டில் 11 பெண்கள் உட்பட 54 பேர், சின்னசேலத்தில் 12 பெண்கள் உட்பட 42 பேரை போலீசார் கைது செய்தனர். மாவட்டம் முழுதும் 186 பெண்கள் உட்பட 608 பேர் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ