சாலையை அகலப்படுத்த அளவீடு செய்யும் பணி தீவிரம்
ரிஷிவந்தியம்; மாடாம்பூண்டி- தியாகதுருகம் வரையிலான சாலையை அகலப்படுத்த அளவீடு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது. கள்ளக்குறிச்சி, தியாகதுருகத்தை சேர்ந்த பொதுமக்கள், திருவண்ணாமலைக்கு செல்ல, தஞ்சாவூரான் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையை ஒட்டி, பல்வேறு கிராமங்கள், ரிஷிவந்தியம் அரசு கல்லுாரி, ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவில், மணலுார்பேட்டை தென்பெண்ணை ஆறு உள்ளது.இந்த பகுதியில் சமீபகாலமாக வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பவுர்ணமி தினத்தன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த சாலை வழியாக செல்கின்றன. இதனால் இருவழிச்சாலையாக உள்ள தஞ்சாவூரான் சாலையை அகலபடுத்தும் பணி துவங்கி உள்ளது. இதையொட்டி விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள ஆபத்தான வளைவுகளை சரிசெய்யவும், சாலையை அகலப்படுத்துவதற்காகவும் அருகில் உள்ள இடங்களை கணக்கீடு செய்யும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.