அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் குவிந்து கிடக்கும் மருத்துவ கழிவுகள்; நோய்கள் பரவும் அபாயம்
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மலைபோல் குவிந்துள்ள மருத்துவ கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு வருவோருக்கு நோய்கள் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி நகரப்பகுதி, கச்சிராயபாளையம் சாலை பழைய மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமைனை மகப்பேறு பிரிவில், நோய்களை உருவாக்கும் வகையில் மருத்துவ கழிவு உள்ளிட்ட குப்பைகளை மலைபோல் கொட்டி வைத்துள்ளனர். இம்மருத்துவமனை தமிழகத்திலேயே அதிக பிரசவம் பார்க்கப்படும் அரசு மருத்துவமனையாக உள்ளது. அதிகளவில் கர்ப்பினிகளும், அவர்களின் பார்வையாளர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் வந்து சென்றாலும், முறையான பராமரிப்பு இன்றி, குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது.மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் பைகள், மாத்திரை அட்டைகள், உணவு கழிவுகள் ஆகியவற்றை மருத்துவமனை வளாகத்திலேயே தொடர்ச்சியாக கொட்டப்படுவதுடன், மூட்டை மூட்டையாக மருத்துவ கழிவுகளும் மலைபோல் குவித்து வைத்துள்ளனர். இந்த கழிவுகளால் ஈக்கள், கொசுக்கள், புழுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன. இவைகள் அனைத்தும், மருத்துவமனைக்குள் மற்றும் வெளிப்பகுதியில் தயாரிக்கப்படும் உணவுகள் மூலம் மனிதர்களுக்கு நோய் பரவுகிறது. மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பையால் கடும் துர்நாற்றமும் வீசுகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டும் இதுவரையில் கழிவு குப்பைகளை அகற்றப்படவில்லை. எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் குப்பை மற்றும் மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.