108 ஆம்புலன்ஸ் வசதி கேட்டு குடியநல்லுாரில் சாலை மறியல்
கள்ளக்குறிச்சி: குடியநல்லுாரில், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் டாக்டர்கள் பணிபுரிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்ட 10க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், குடியநல்லுார் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் நேற்று காலை 8.15 மணியளவில் குடியநல்லுார் மும்முனை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். குடியநல்லுாரில் உள்ள அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் டாக்டர்கள் பணிபுரிய வேண்டும், 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. தகவலறிந்த வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் வி.ஏ.ஓ., ராஜதுரை ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, 9:15 மணியளவில் கலைந்து சென்றனர். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் மறியலில் ஈடுபட்டதாக சத்தியராஜ், குபேந்திரன், ஏழுமலை, அருள் உட்பட 10க்கும் மேற்பட்ட நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.