அனைத்து காவல் நிலையங்களிலும் வி.வி.பி., விரிவுபடுத்தப்படுமா? எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ள 'வில்லேஜ் விஜிலென்ஸ் போலீஸ்' எனப்படும் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் திட்டத்தை மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களிலும் விரிவுபடுத்த எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனை, திருட்டு, அடிதடி, வழிப்பறி உட்பட பல்வேறு வகையான குற்ற சம்பவங்கள் நடக்கிறது. இது போன்ற சம்பவங்கள் மற்றும் அசாம்பாவிதங்களை தடுக்கும் நோக்கத்திலும், பொதுமக்களுக்கும், போலீசாருக்குமிடையே நல்லுணர்வு ஏற்படும் வகையிலும் கடந்த 2021ம் ஆண்டு, 'வில்லேஜ் விஜிலென்ஸ் போலீஸ்' எனப்படும் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் படி, 4 முதல் 5 கிராமங்களுக்கு ஒரு காவலர் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, போலீசார் தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள கிராமத்திற்குச் சென்று உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் இளைஞர்கள் முன்னிலையில் விழிப்புணர்வு கூட்டம் நடத்துவார்கள். மேலும், ஊரில் பொது இடங்களில் போலீசார் புகைப்படம், பெயர், தொடர்பு எண்ணுடன் கூடிய அறிவிப்பு பலகை அமைக்கப்பட்டு, ஒவ்வொரு ஊருக்கும் 'வாட்ஸ்அப்' குழு தொடங்கப்பட்டு, பலரது மொபைல்போன் எண்ணை இணைப்பர். இந்த குழுவில் ஊரில் நடைபெறும் திருவிழா, விளையாட்டுப் போட்டி, பிரச்னைகள், அசம்பாவிதம் குறித்த தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படும். இவ்வாறு செய்வதன் மூலம் கிராமங்களில் சிறிய பிரச்னைகள் நடந்தால் கூட போலீசாருக்கு உடனடியாக தகவல் கிடைத்துவிடும். இது குறித்து தகவலறியும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொள்வர். பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திட்டம் மாவட்டத்தில் நிலவும் போலீசார் பற்றாக்குறையாலும், பணிமாறுதல் காரணமாகவும் சரியாக செயல்படவில்லை. பணிமாறுதல் பெற்று வேறு காவல் நிலையங்களுக்குச் சென்ற போலீசாருக்கு பதிலாக புதிய நபர் நியமிக்கப்படவில்லை. பொலிவிழந்த வி.வி.பி., திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்ற செல்வநாயகம் வி.வி.பி., திட்டத்தை மீண்டும் செயல்படுத்தியுள்ளார். இதையடுத்து, போலீசார் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட கிராமங்களுக்குச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஒரு சிலர் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட கிராமங்களில், புகைப்படம், பெயர் மற்றும் தொடர்பு எண்ணுடன் அச்சிடப்பட்ட நோட்டீசையும் ஒட்டியுள்ளனர். போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் நல்லுணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ள பயனுள்ள இந்த திட்டத்தை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் விரிவுப்படுத்த எஸ்.பி., ஷஹ்னாஸ் உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.