உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / * தம்மனுாரில் புதிதாக கல் குவாரி அமைக்க... எதிர்ப்பு நீர்நிலை, சாலை, விளை நிலங்கள் பாழாகும்

* தம்மனுாரில் புதிதாக கல் குவாரி அமைக்க... எதிர்ப்பு நீர்நிலை, சாலை, விளை நிலங்கள் பாழாகும்

வாலாஜாபாத் :உத்திரமேரூரில் செயல்படும் கல் குவாரிகளால் பல வீடுகள், விளை நிலங்கள், நீர்நிலைகள், சாலைகள் மோசமான நிலைக்கு மாறியுள்ளது. இந்நிலையில், புதிதாக ஒரு கல் குவாரி, வாலாஜாபாத்தை ஒட்டிய தம்மனுாரில் அமையுள்ளதால், தங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என, பகுதிவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு அனுமதி பெற்று, 53 தனியார் கல் குவாரிகள் இயங்குகின்றன. இதில், உத்திரமேரூர் ஒன்றியத்தில் மட்டும் 24 குவாரிகள் செயல்படுகின்றன. உத்திரமேரூர் ஒன்றியத்தில், மதுார், சிறுதாமூர், அருங்குன்றம், பட்டா, சிறுமயிலுார், சித்தாலப்பாக்கம், அமராவதிபட்டணம், குண்ணவாக்கம், பழவேரி, பினாயூர், பேரணக்காவூர் உள்ளிட்ட பல கிராமங்களில், 10 ஆண்டுகளுக்கு மேலாக கல் குவாரிகள் தொடர்ந்து இயங்குகின்றன.அதேபோல, காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார் ஆகிய ஒன்றியங்களிலும், பல்வேறு பகுதிகளில் தனியார் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.இந்த குவாரிகளில், வெடி வைத்து உடைத்து எடுக்கப்படும் பாறை கற்களை, சுற்றுவட்டார கிராமங்களில் இயங்கும் கிரஷர்கள் வாயிலாக ஜல்லிக்கற்கள் மற்றும் எம்.சாண்ட் மணலாக அரைத்து, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு லாரிகள் வாயிலாக அனுப்பப்படுகிறது.இதில் பல கல் குவாரிகள், அரசு விதிமுறைகளுக்கு மாறாக அதிக ஆழமாகவும், புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து குவாரி நடத்துவதாகவும், அதிசக்தி வாய்ந்த வெடிகள் பயன்படுத்தி பாறைகளை தகர்ப்பதாகவும், பொதுமக்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.அதிகசக்தி வாய்ந்த வெடியால் நில அதிர்வு ஏற்பட்டு, வீடுகளில் விரிசல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. தவிர, குவாரிகளில் அதிக ஆழம் தோண்டும் பள்ளத்தால், விவசாய கிணறுகளின் நீர்மட்டம் குறைந்து பாதிப்பு ஏற்படுவதாக, விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.கல் குவாரிகளுக்கு சென்றுவர ஏதுவாக பல இடங்களில் புறம்போக்கு நிலங்களில் பாதை அமைத்துள்ளதாகவும், இதனால், மேய்ச்சல் பகுதிகளுக்கு கால்நடைகள் சென்றுவர இயலாத நிலையும் உள்ளது.மேலும், லோடு ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் சாலைகள் பழுதாகி, நாள் முழுக்க பறக்கும் மண் புழுதியால் தினசரி அவதிப்படுவதாக வாகன ஓட்டிகளும் புலம்புகின்றனர்.மாவட்டத்தில் பெருகி வரும் இக்கல்குவாரிகளால், கிராம மக்களின் வாழ்வாதாரம் பல்வேறு வகையில் பாதிக்கும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆற்று மணல் குவாரி செயல்பட தடை விதிக்கப்பட்டிருப்பதை போல, கல் குவாரிகள் இயங்க, தமிழக அரசு தடை விதிக்க வேண்டும், தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.இந்நிலையில், வாலாஜாபாத் அடுத்த தம்மனுார் - நெய்குப்பம் கிராமங்களுக்கு இடையிலான பகுதியில், புதிதாக தனியார் கல் குவாரி துவங்கப்பட உள்ளது. இதுவரை, இங்குள்ள சுற்று வட்டாரத்தில் கல்குவாரிகள் இல்லாத நிலையில், இந்த புதிய கல்குவாரி அமைப்பதை அப்பகுதியினர் பலரும் எதிர்க்கின்றனர்.அங்கம்பாக்கம் ஊராட்சியில், உலக தண்ணீர் தினத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில், குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுபோல், பல இடங்களில் கல் குவாரிகள் தொடர்ந்து துவங்குவதால், கிராம மக்கள் தங்களது வாழ்வாதாரம் பாதித்து, வாழவே முடியாத நிலை ஏற்படுவதாக கண்ணீர் வடிக்கின்றனர்.கனிமவளத்துறை அனுமதியோடும், மாவட்ட நிர்வாகதின் ஆதரவோடும், குவாரிகள் தொடர்ந்து செயல்படுவதாக, கவலை தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து, அங்கம்பாக்கம் பகுதி ஊராட்சி தலைவர் ஏழுமலை கூறியதாவது:கடந்த ஆண்டு, உத்திரமேரூர் ஒன்றியம் சிறுதாமூர் கிராமத்தில் எதிர்ப்பை மீறி புதிதாக, நான்கு கல் குவாரிகள் அமைக்கப்பட்டு தற்போது இயங்குகின்றன.இந்நிலையில், தம்மனுார் கிராமத்தில் புதிதாக தனியார் கல் குவாரி அமைக்கப்பட உள்ளது. அவ்வாறு கொண்டு வந்தால், அவளூர், கண்ணடியன்குடிசை மற்றும் அங்கம்பாக்கம் ஆகிய கிராமங்களின் வழியாக குவாரிக்கு கனரக வாகனங்கள் இயக்க வேண்டிய நிலை உள்ளது.இக்கிராமங்கள் அனைத்தும் விவசாயம் சார்ந்த பகுதியாகவும், சாலை ஓரங்களில் வழிபாட்டு தலங்கள் அதிகம் கொண்டதாகவும் உள்ளன.கல் குவாரி செயல்பாடு வாயிலாக விவசாயம் மற்றும் கிராம இயற்கை அரண் ஆகியவை அழிந்து போவதோடு, கிராம சாலைகள் சேதமாகி சுற்றுச்சூழல் பாதிப்புகளும் ஏற்படும்.எனவே அப்பகுதியில் கல் குவாரி அமைக்கக்கூடாது என வலியுறுத்தி வருகிறோம். இதுகுறித்து, ஊராட்சி கிராம சபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை