முதல்வர் போட்டியில் குளறுபடி மாணவர்கள் போராட்டம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி, கடந்த 10ல் துவங்கியது. வரும், 24ம் வரை நீச்சல், தடகளம் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் பொதுமக்கள் பிரிவு செஸ் போட்டி, 16, 17ம் தேதிகளில் நடக்கும் என, மாவட்ட விளையாட்டு துறை அறிவித்திருந்தது.இதற்காக, நேற்றைய போட்டியில் பங்கேற்க, 250க்கும் மேற்பட்டோர் மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு, காலையில் வந்தனர்.ஆனால், நேற்று நடப்பதாக இருந்த செஸ் போட்டி அனைத்தும், நேற்று முன்தினம் நடத்தப்பட்டு விட்டதாக, அங்கிருந்த அலுவலர்கள் தெரிவித்தனர்.இதனால் ஏமாற்றமடைந்த விளையாட்டு வீரர்கள், மாவட்ட விளையாட்டு அலுவலர் அறையை முற்றுகையிட்டனர். பின், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தி மனு அளித்தனர்.விளையாட்டு வீரர்கள் கூறுகையில், '16ல் நடக்கவிருந்த போட்டியை, 15ல் நடத்தி முடித்ததற்கான காரணம் தெரியவில்லை. போட்டியில் ஆர்வமாக பங்கேற்க வந்த எங்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. 15ல் நடத்திய போட்டியை ரத்து செய்து, மீண்டும் செஸ் போட்டி நடத்த வேண்டும்' என்றனர்.