உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் மஞ்சள் வாலாட்டி பறவை வருகை

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் மஞ்சள் வாலாட்டி பறவை வருகை

சென்னை: சென்னை, வேளச்சேரி முதல் பெரும்பாக்கம் வரையிலான பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு 199 பறவைகளின் வருகை, கணக்கெடுப்பு வாயிலாக ஆவண ரீதியாக உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.இதில் 74 பறவைகள், வெளிநாடுகளில் இருந்து வலசை வருபவை என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.இந்நிலையில், ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் இருந்து நான்கு வகை வாலாட்டி பறவைகள், ஆண்டுதோறும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு வருகின்றன.நீர்மட்டம் குறைந்த இடத்தில் சேறுகளில் இருந்து, சிறு பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் பறவைகள், இங்கு சிறப்பு கவனம் பெறுகின்றன. இது குறித்து, 'தி நேச்சர் டிரஸ்ட்' அமைப்பின் நிறுவனர் திருநாரணன் கூறியதாவது:பொதுவாக, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு, செப்., 1ல் மஞ்சள் வாலாட்டி பறவைகள் வரும். செப்., இறுதியில் எலுமிச்சை வாலாட்டிகள் வரும். அக்., மத்தியில் வெள்ளை வாலாட்டிகள், பிப்., மாதத்தில் காட்டு வாலாட்டிகள் வரும்.அந்த வகையில், தற்போது, செப்., 4ல் மஞ்சள் வாலாட்டிகள் இங்கு வந்துள்ளன. தற்போதைய நிலவரப்படி, வனத்துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், 4 மஞ்சள் வாலாட்டிகள் வந்திருப்பது உறுதியாகிறது.ஒவ்வொரு ஆண்டும், சீசன் காலத்தில் இங்கு, 1,800 வரை மஞ்சள் வாலாட்டிகள் வருவது உண்டு. இந்த வகையில் பறவைகள் சீசன் துவக்கத்தை உறுதிபடுத்துவதாக இதன் வருகை அமைந்துள்ளது. வாலாட்டி பறவைகள் வருகையின் காரணமாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் சூழலியல் தன்மை சிறப்பாக உள்ளது என்பதை மதிப்பிட முடிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

கணக்கு விபரம்

கடந்த ஆண்டு பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு மாத வாரியாக மஞ்சள் வாலாட்டிகள் வருகை விபரம்: மாதம் எண்ணிக்கை செப்., 19 அக்., 412நவ., 1,913டிச., 916 ஜன., 1,723 பிப்., 1,423மார்ச் 1,291


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ