கண் மருத்துவ முகாம் 197 பேர் பங்கேற்பு
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனை முகாமில் 197 பேர் பங்கேற்றனர். காஞ்சிபுரம் கோவில் நகர லயன்ஸ் சங்கம், சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனை முகாம், காஞ்சிபுரம் மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. சென்னை அரவிந்த் கண் மருத்துவமனையைச் சேர்ந்த, கண் மருத்துவ நிபுணர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர். முகாமில், 197 பேர் பங்கேற்றனர். இதில், நோயின் தன்மைக்கேற்ப மருந்து மாத்திரை வழங்கப்பட்டது. கண்புரை குறைபாடு உள்ள, 60 பேர் கண் மருத்துவ நிபுணர்களால் தேர்வு செய்யப்பட்டு, விழிலென்ஸ் பொருத்தி, இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்காக, சென்னை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். லேசான கண் பார்வை குறைபாடு உள்ள, 48 பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது என, காஞ்சிபுரம் கோவில் நகர லயன்ஸ் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.