உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி - வெண்குடி புறவழிச்சாலை அமைக்க கும்டா ஒப்புதல்! தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் பயணியருக்கு வசதி

காஞ்சி - வெண்குடி புறவழிச்சாலை அமைக்க கும்டா ஒப்புதல்! தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் பயணியருக்கு வசதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் - வெண்குடி இடையே பாலாறையொட்டி, 14 கி.மீ., துாரத்திற்கு, புதிதாக புறவழிச்சாலை ஒன்றை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த, 'கும்டா' எனப்படும் சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம், ஒப்புதல் வழங்கியுள்ளது. இதை தொடர்ந்து, திட்டத்தை செயல்படுத்தும் வகையில், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுத்துள்ளது திட்டம் நடைமுறைக்கு வந்தால் போக்குவரத்து நெரிசல் குறைந்து, தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் பயணியர் நிம்மதி அடைவர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், வேலைவாய்ப்பு, உட்கட்டமைப்பு, தொழில்நுட்பம், ஆன்மிகம், கல்வி நிறுவனங்கள், சாலைகள் என பல்வேறு வகையிலான வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.காஞ்சிபுரம் மாவட்டத்தில், சென்னை - பெங்களூரு விரைவு சாலை, பரந்துார் விமான நிலையம் போன்ற மிகப்பெரிய அளவிலான வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்படும் நிலையில், சரக்கு போக்குவரத்திற்கும், பொதுமக்கள் பயன்பாடிற்கும் தேவையான புதிய சாலைகள் தேவைப்படுகின்றன.

பரிந்துரை

காஞ்சிபுரம் மாவட்டத்தில், எந்தெந்த பகுதிகளில் புதிய சாலைகள் தேவையோ அங்கெல்லாம், புதிய புறவழிச் சாலைகள் அமைக்க வேண்டிய அவசியத்தை, அரசுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிந்துரை செய்கிறது. மாவட்டத்தில், வாலாஜாபாத் அருகேயுள்ள வெண் குடியிலும், காஞ்சிபுரம் செவிலிமேட்டிலும் ஏற்கனவே புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. உத்திரமேரூரில் புதிதாக புறவழிச்சாலை அமைக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. இந்நிலையில், அடுத்தகட்டமாக, காஞ்சிபுரம் செவிலிமேட்டில் இருந்து வாலாஜாபாத் அருகேயுள்ள வெண்குடி வரையிலான, 14 கி.மீ., துாரத்திற்கு, பாலாற்றை ஒட்டி புறவழிச்சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதாவது, காஞ்சிபுரம் அருகேயுள்ள செவிலிமேடு பகுதியில் தொடங்கி, ஓரிக்கை, அய்யம்பேட்டை, வில்லிவலம், திம்மராஜாம்பேட்டை வழியாக, வெண்குடியில் உள்ள புறவழிச்சாலையை இணைக்கும் வகையில், இச்சாலை அமைக்க திட்டமிடப்படுகிறது. புதிதாக இந்த புறவழிச்சாலை அமைப்பது தொடர்பாக, 2024ல், அப்போதைய காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகம் இதற்கான திட்டங்களை வகுத்தார். இதற்கான அறிக்கையை, மாவட்ட நிர்வாகத்திற்கு கடந்தாண்டு சமர்பித்திருந்தார். அந்த அறிக்கையை, தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் அனுப்பியிருந்தது. இதையடுத்து, 'கும்டா' எனப்படும் சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம், இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடங்க, காஞ்சிபுரம் மாவட்ட நெடுஞ்சாலை துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.

எதிர்பார்ப்பு

'கும்டா'வின் அறிவுறுத்தலின்படி, காஞ்சிபுரம் மாவட்ட நெடுஞ்சாலை துறையினர், துறை மேலிடத்தில், புறவழிச்சாலைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி கேட்டுள்ளனர். நெடுஞ்சாலை துறை, திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி கொடுத்த உடன், புறவழிச்சாலைக்கான அடுத்தகட்ட பணிகள் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மட்டுமின்றி, காஞ்சிபுரம் உள்ளிட்ட புறநகர் மாவட்டங்களிலும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான எதிர்கால திட்டங்களை 'கும்டா' வகுத்து வருகிறது. கும்டாவின் அடுத்த திட்டத்தின் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் - வெண்குடி புறவழிச்சாலை அமைய உள்ளது. இத்திட்டத்தை, காஞ்சிபுரம் நெடுஞ்சாலை துறை, நிதி கிடைத்தவுடன் மேற் கொள்ளும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 'கும்டா' பரிந்துரை செய்துள்ள திட்டங்களில், காஞ்சிபுரம் செவிலிமேடு - வெண்குடி இடையேயான புதிய புறவழிச்சாலை பற்றிய பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. நாங்கள் புறவழிச்சாலை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மேலிடத்தில் அனுமதி கேட்டுள்ளோம். மேலிடம் அறிக்கை தயாரிக்க அனுமதி கொடுத்தவுடன், அடுத்தகட்ட பணிகள் வேகமெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார். என்ன பலன்? புதிதாக திட்டமிடப்படும் புறவழிச்சாலை மூலம், செய்யாறு சிப்காட்டில் இருந்து வரும் வாகனங்கள், காஞ்சிபுரம் நகருக்குள் வந்து, பெரியார் நகர் வழியாக வாலாஜாபாத் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. நேரடியாக செவிலிமேடு பாலாறு பாலம் வழியாக, வில்லிவலம், திம்மராஜாம்பேட்டை, வெண்குடி புறவழிச்சாலையை அடையலாம். சென்னை, தாம்பரம், கிளாம்பாக்கம், செங்கல்பட்டு போன்ற இடங்களுக்கு, காஞ்சிபுரம் வழியாக செல்ல இந்த சாலை பயன்படும். செவிலிமேடு - கீழம்பி இடையேயான சாலை நான்கு வழியாக மாற்றப்பட உள்ளது. இதனால், கீழம்பி, செவிலிமேடு வழியாக காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் நகருக்குள் செல்லாமலேயே தாம்பரம், ஒரகடம் போன்ற இடங்களுக்கு செல்ல முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !