காஞ்சி வரதர் கோவிலில் பிரம்மோத்சவம் நிறைவு
காஞ்சிபுரம்:-காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரமோத்சவம், கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. உத்சவத்தையொட்டி தினமும், காலை, மாலையில், சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உலா வந்தார்.இதில், பிரபல உத்சவங்களான கடந்த 13ம் தேதி கருடசேவை உற்சவமும், 17ம் தேதி தேரோட்டமும், ஒன்பதாம் நாள் உத்சவமான நேற்று முன்தினம் காலை, அனந்தசரஸ் திருக்குளத்தில், தீர்த்தவாரி உத்சவமும் நடந்தது. இரவு புண்ணியகோடி விமானத்தில் பெருமாள் எழுந்தருளி வீதியுலா வந்தார்.பிரம்மோத்சவம் நிறைவு நாளான நேற்று காலை த்வாதச ஆராதனம் நடந்தது. இரவு வெட்டிவேர் சப்பரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள், நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார்.இத்துடன், 10 நாட்களாக நடந்து வந்த வைகாசி பிரம்மோத்சவம் நேற்றுடன் நிறைவு பெற்றது.பிரம்மோத்சவத்திற்கான ஏற்பாட்டை கோவில் உதவி ஆணையரும், நிர்வாக அறங்காவலருமான ராஜலட்சுமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.