உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையில் பிடிக்கப்பட்ட மாடு ரூ.9,500க்கு மாட்டு தொழுவத்தினர் விற்றது அம்பலம்

சாலையில் பிடிக்கப்பட்ட மாடு ரூ.9,500க்கு மாட்டு தொழுவத்தினர் விற்றது அம்பலம்

காஞ்சிபுரம்:சாலைகளில் சுற்றி திரிந்த மாடுகளை பிடித்த மாநகராட்சி அதிகாரிகள், மாடுகள் கட்டி பாதுகாக்கப்படும் இடத்தில் ஒப்படைத்த நிலையில், தனி நபருக்கு, 9,500 ரூபாய்க்கு, மாட்டு தொழுவத்தினர், பசு மாட்டை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி யில், சாலையின் நடுவே வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவாக சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகளும், அவ்வப்போது, மாநகராட்சியில் சுற்றும் மாடுகளை பிடித்து, மாடுகள் கட்டி பாதுகாக்கப்படும் இடத்தில் ஒப்படைக்கின்றனர். மாடுகள், உரிமையாளர்களிடம் திருப்பி வழங்கப்படமாட்டாது என, மாநகராட்சி அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவிக்கின்றனர். இவ்வாறு, ஏராளமான மாடுகளை பிடித்து, காஞ்சிபுரம் அருகே, தனியார் நடத்தும் மாடுகள் கட்டி பாதுகாக்கப்படும் இடத்தில், மாநகராட்சி அதிகாரிகள் ஒப்படைத்து வந்தனர். இந்நிலையில், ஒரு வாரத்திற்கு முன் காவலான்கேட், ஓரிக்கை உள்ளிட்ட இடங்களில் இருந்து பிடிக்கப்பட்ட ஆறு மாடுகளை, களக்காட்டூர் ஊராட்சியில் உள்ள விச்சாந்தாங்கல் கிராமத்தில், உள்ள மாடுகள் கட்டி பாதுக்காக்கப்படும் இடத்தில் ஒப்படைத்துள்ளனர். அங்கு இருந்த ஆறு மாடுகளில், ஒரு பசு மாட்டை, சம்பந்தப்பட்ட மாடுகளை கட்டி பாதுகாக்கும் அமைப்பினர், தனி நபருக்கு விற்பனை செய்திருப்பதாக துப்புரவு ஆய்வாளருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் சீனிவாசன் என்பவர், மாடுகள் கட்டி பாதுகாக்கும் இடத்திற்கு சென்று பார்த்ததில், பசு மாட்டை 9,500 ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, பசு மாட்டை விற்பனை செய்த, மாடுகளை கட்டி பாதுகாக்கும் அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க, துப்புரவு ஆய்வாளர் சீனிவாசன், மாநகராட்சி கமிஷனருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரத்தில், முந்தைய மாதங்களில் பல மாடுகள் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என, சமூக ஆர்வலர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். சாலையில் இருந்து பிடித்து, மாடுகள் கட்டி பாதுகாக்கும் இடத்தில் ஒப்படைக்கப்படும் மாடுகள் தற்போதைய நிலை குறித்து, மாநகராட்சி கமிஷனர் நவேந்திரன் மற்றும் காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி ஆகியோர் விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை