ஊத்துக்காட்டில் மருந்து கட்டுப்பாட்டு அலுவலகம் திறப்பு
வாலாஜாபாத், ஊத்துக்காட்டில், மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குநர் அலுவலகம் புதியதாக கட்டப்பட்டு நேற்று திறப்பு விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தின் மருந்து மொத்த வினியோகிஸ்தர்கள் மற்றும் மருந்து கடை உரிமையாளர்கள் தங்களின் உரிமங்களை புதுப்பிக்கவும், மருந்து தொடர்பான புகார்கள் தெரிவிக்கவும், சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குநர் அலுவலகம் சென்று வருகின்றனர். இதனால், காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதியில் புதிதாக மண்டல மருந்து கட்டுப்பாட்டு அலுவலகம் அமைக்க வலியுறுத்தப்பட்டு வந்தது. அதன்படி, வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடு பகுதியில், காஞ்சிபுரம் மண்டல மருந்து உதவி இயக்குநர் அலுவலகம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதற்காக 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஆண்டில் அலுவலகத்திற்கான கட்டடப் பணி துவங்கியது. பணிகள் முழுமையாக நிறைவு பெற்றதையடுத்து நேற்று திறப்பு விழா நடந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார். உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், காஞ்சிபுரம் மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குநர் தீபா, வாலாஜாபாத் ஒன்றியக் குழு தலைவர் தேவேந்தரன், துணை தலைவர் சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.