உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அரும்புலியூர் ஏரிக்கு பாலாற்று தண்ணீர் வருவதில் சிக்கல் விவசாயிகள் கவலை

அரும்புலியூர் ஏரிக்கு பாலாற்று தண்ணீர் வருவதில் சிக்கல் விவசாயிகள் கவலை

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூரில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டிலான 690 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. இந்த ஏரி, மழைக் காலத்தில் முழுமையாக நிரம்பினால், அத்தண்ணீரை கொண்டு அரும்புலியூர், சீத்தாவரம், காவணிப்பாக்கம், கரும்பாக்கம் பகுதிகளில் உள்ள, 1,060 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறும்.இந்த ஏரிக்கு பழையசீவரம் பாலாற்று தடுப்பணையில் இருந்து பிரிந்து செல்லும் துணைக் கால்வாய் உள்ளது. தடுப்பணை நிரம்பி வழிந்தால், இக்கால்வாய் வாயிலாக தண்ணீர் சென்று, அரும்புலியூர் ஏரி நிரம்ப வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.எனினும், தடுப்பணை ஏற்படுத்தி 4 ஆண்டுகள் கடந்தும், இதுவரை பாலாற்று தண்ணீர் ஏரிக்கு வந்தடையவில்லை என, அப்பகுதி விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.இந்நிலையில், பாலாற்று கால்வாய் வாயிலாக ஏரிக்கு தண்ணீர் வராமல் தடைபடுவது குறித்து நேற்று அப்பகுதி விவசாயிகள் பாலாற்றையொட்டிய கால்வாய் பகுதிகளை ஆய்வு செய்தனர்.இதுகுறித்து, அரும்புலியூர் விவசாயிகள் கூறியதாவது:பாலாற்று தடுப்பணையில் இருந்து, அரும்புலியூர் ஏரிக்கு வந்தடையும் நீர் வரத்து கால்வாய் கரையின் குறிப்பிட்ட ஒரு பகுதி மிகவும் தாழ்வானதாக உள்ளது. இதனால், கால்வாய் வாயிலாக வரும் தண்ணீர் தாழ்வான கரைப்பகுதி வழியாக ஆற்றில் மடை மாறி செல்லும் நிலை உள்ளது.மேலும், பாலாற்றையொட்டிய கால்வாய் பகுதி பள்ளமாகவும், அதற்கடுத்த கால்வாய் பகுதிகள் மேடாகவும் உள்ளது. இதனால், கால்வாய் வாயிலாக ஏரிக்கு தண்ணீர் சென்றடையவில்லை.எனவே, பள்ளமான கால்வாய் பகுதியின் கரையை உயர்த்தி கட்டி, இப்பருவ மழைக்கு ஏரிக்கு தண்ணீர் சென்றடைய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி