சக்கரத்தில் சிக்கி இறப்பதை தடுக்க அரசு பேருந்துகளில் பைபர் தகடு பொருத்தம்
காஞ்சிபுரம்,:அரசு பேருந்துகளில் செல்லும் பயணியர், மாணவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் பல்வேறு இடங்களில் நடந்தபடி உள்ளன. இவற்றை கட்டுப்படுத்த அரசு போக்குவரத்து கழகங்கள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. ஏற்கனவே நகர பேருந்துகளின் படிகளுக்கு அருகில் உள்ள ஜன்னல்களில் இரும்பு தகடு அடிக்கப்பட்டது. இதனால், மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணிப்பதை தவிர்க்க முடிந்தது.இதன் தொடர்ச்சியாக, சக்கரங்களுக்கு இடையே தற்போது பைபர் தகடு அமைக்கும் பணிகள், காஞ்சிபுரம் போக்குவரத்து மண்டலத்தில் நடைபெற்று வருகின்றன.விழுப்புரம் கோட்டம், காஞ்சிபுரம் மண்டலம் நிர்வாகத்தின் கீழ், 10 பணிமனைகளில், 145 நகர பேருந்து உட்பட 520 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், 145 நகர பேருந்துகளுக்கு முதற்கட்டமாக அண்டர் ரன் எனப்படும் பைபர் தகடு பொருத்தும் பணிகள் நடக்கின்றன.காஞ்சிபுரம் மண்டலத்திற்கான நகர பேருந்துகளுக்கு, அண்டர் ரன் தகடுகள் பொருத்தும் பணி, ஓரிக்கை பணிமனையில் நடக்கின்றன. இதன் மூலம், டூ- வீலரில் செல்வோர், பாதசாரிகள், பேருந்தில் இருந்து தவறி விழுவோர் என, சக்கரத்தில் சிக்கிகொள்ளாமல் தப்பிக்க முடியும் என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.மேலும், நகர பேருந்துகளின் படிகளில் நின்று பயணிப்பதை தவிர்க்க, அனைத்து பேருந்துகளுக்கும் தானியங்கி கதவு பொருத்தப்படுகின்றன.