உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நிழற்குடையை மறைத்து கட்சி பேனர் கருவேப்பம்பூண்டி பயணியர் அவதி

நிழற்குடையை மறைத்து கட்சி பேனர் கருவேப்பம்பூண்டி பயணியர் அவதி

உத்திரமேரூர்:உத்திரமேரூர் - காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில், கருவேப்பம்பூண்டி கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணியர் நிழற்குடையை மறைத்து கட்சி பேனர் வைக்கப்பட்டுள்ளதால், பயணியர் அவதிபடுகின்றனர்.உத்திரமேரூர் - காஞ்சிபுரம் -நெடுஞ்சாலையில், கருவேப்பம்பூண்டியில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.இங்கு, உத்திரமேரூர், காஞ்சிபுரம், மதுராந்தகம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் நின்று செல்கின்றன. இந்த பயணியர் நிழற்குடையை பயன்படுத்தி, அப்பகுதி மக்கள், பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இந்நிலையில், இந்த பயணியர் நிழற்குடையை முழுதுமாக மறைத்து அரசியல் கட்சியினர் விளம்பர பேனர் வைத்து வருகின்றனர்.இந்த பேனரால் பேருந்துக்குக்காக வருபவர்கள் பயணியர் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், பயணியர் பேருந்துக்காக சாலையிலே நீண்ட நேரம் நிற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.அப்போது, மழை மற்றும் வெயில் நேரங்களில் பயணியர் சாலையிலேயே நின்று பேருந்து பிடித்து செல்கின்றனர்.பேனர் வைப்பது குறித்த நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை காற்றில் பறக்கவிடப்பட்டு வருகிறது. பயணியருக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக, பேனர்களை வைக்கும் அரசியல் கட்சியினர் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஊரக வளர்ச்சி துறையினர் தயக்கம் காட்டி வருகின்றனர்.எனவே, கருவேப்பம்பூண்டி பயணியர் நிழற்குடை முன் வைக்கப்பட்டுள்ள கட்சி விளம்பர பேனரை அகற்ற, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை