| ADDED : டிச 07, 2025 05:49 AM
உத்திரமேரூர்: மலையாங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் வயலில் தேங்கிய மழைநீரை பயன்படுத்தி விவசாயிகள் உழவு பணிகளை துவக்கி உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் சில தினங்களாக பெய்த கனமழையால் நீர்நிலைகள் நிரம்பி வருவதோடு விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால், குறிப்பிட்ட சில இடங்களில் பயிரிட்ட விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது. அதே நேரத்தில் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட குண்ணவாக்கம், மருதம், மலையாங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயம் துவக்காத நிலங்களில் தேங்கி உள்ள மழைநீரை விவசாயிகள் உழவு பணிக்கு பயன்படுத்தி வருகின்றனர். ஏரி மற்றும் கிணற்று பாசனம் மூலம் சாகுபடி செய்யும் விவசாயிகள், நிலத்தில் தேங்கி உள்ள மழைநீரை சம்பா பட்ட சாகுபடிக்கு பயன்படுத்தி உழவுப் பணிகளை துவங்கி உள்ளனர். ஏரிகளில் இருந்து மதகு வழியாக இன்னும் தண்ணீர் திறக்காததால் நிலங்களை விதைப்புக்கு தயார் படுத்தவும், தேக்கமான மழைநீரைக் கொண்டு நிலங்களை சமன்படுத்தவும் மழைநீர் உதவியாக உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கூறினர்.