செடிகள் வளர்ந்து துார்ந்த கால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் திருக்காலிமேடு பாலாஜி நகரில், செடிகள் வளர்ந்து துார்ந்த நிலையில் உள்ள கான்கிரீட் மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சி 22வது வார்டு, திருக்காலிமேடு கவரை தெருவிற்கும், பாலாஜி நகருக்கும் இடையே உள்ள பகுதியில், மழைநீர் சேகரமாகும் குட்டை ஒன்று உள்ளது. அப்பகுதி நிலத்தடி நீராதாரமாக விளங்கி வரும் இக்குட்டை, ஆண்டுதோறும் பருவமழையின்போது, முழுமையாக நிரம்பினால், குட்டையில் இருந்து வெளியேறும் உபரிநீர் மஞ்சள் நீர் கால்வாய்க்கு செல்லும் வகையில், கான்கிரீட் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், பாலாஜி நகர், சிந்தாமணி விநாயகர் கோவில் ஒட்டியுள்ள பகுதியில், நீர்வழித்தட பகுதியில் செடிகள் வளர்ந்து கால்வாய் என்பதற்கான அடையாளமே தெரியாமல் துார்ந்த நிலையில் உள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், மழைநீர் சேகரிப்பு குட்டை முழுமையாக நிரம்பினால், குட்டையில் இருந்து வெளியேற வேண்டிய உபரிநீர் கால்வாய் வாயிலாக வெளியேற வழி இல்லாததால், குட்டையை சுற்றியுள்ள வீடுகளை மழைநீர் சூழும் நிலை உள்ளது. எனவே, திருக்காலிமேடு, பாலாஜி நகரில் செடிகள் வளர்ந்து துார்ந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.