தடுப்பு இல்லாத சிறுபாலம் வடமங்கலத்தில் விபத்து அபாயம்
ஸ்ரீபெரும்புதுார்:வடமங்கலம் சாலையில் தடுப்பு இல்லாத சிறுபாலத்தால், வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, வடமங்கலம் சந்திப்பில் இருந்து, பண்ணுார் செல்லும் பிரதான சாலை உள்ளது.இந்த சாலை வழியாக, சுற்றுவட்டாரத்தினர், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கு கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகின்றனர்.இந்த சாலையில், வடமங்கலம் ஏரி உபரிநீர் செல்லும் கால்வாய் குறுக்கே உள்ள சிறுபாலத்தின் இருபுறமும் தடுப்பு இல்லை.இதனால், இவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் சிறுபாலத்தின் மீது செல்லும் போது, எதிர்பாராத விதமாக கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.குறிப்பாக, இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது, கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.எனவே, சிறுபாலத்தின் இரண்டு பக்கங்களிலும் தடுப்பு அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.