உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / துவக்கப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் பார்த்தீனியம் செடிகளை அகற்ற வலியுறுத்தல்

துவக்கப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் பார்த்தீனியம் செடிகளை அகற்ற வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கைலாச நாதர் மாநகராட்சி துவக்கப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் வளர்ந்துள்ள பார்த்தீனியம் செடிகளை அகற்ற வேண்டும் என, மாணவ - மாணவியரின் பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சி, எல்லப்பா அவென்யூவில், கைலாசநாதர் மாநகராட்சி துவக்கப் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் ஒரே வளாகத்தில் இயங்கி வருகிறது. இப்பள்ளி விளையாட்டு மைதானத்தை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், வளாகத்தில் பார்த்தீனியம் செடிகள் வளர்ந்துள்ளன. இச்செடிகளால், மனிதர்களுக்கும் ஒவ்வாமை ஏற்பட்டு தோல் அரிப்பு, கொப்புளம், கண் எரிச்சல், மூச்சுத்திணறல், ஆஸ்துமா ஏற்படும் என கூறப் படுகிறது. இதனால், அங்கன்வாடி மையம் மற்றும் துவக்கப் பள்ளியில் பயிலும் மாணவ- - மாணவியருக்கு பார்த்தீனியம் செடிகளால் உடல் நலம் பாதிக்கும் சூழல் உள்ளது. மேலும், செடிகளுக்கு இடையே விஷ ஜந்துக்கள் தஞ்சமடையும் நிலை உள்ளது. இதனால், மைதானத்தில் விளையாடும் மாணவ - மாணவியருக்கு விஷ ஜந்துக்களால் அச்சுறுத்தல் ஏற்படும் சூழல் உள்ளது. மாநகராட்சி எல்லையில் உள்ள பல்வேறு பள்ளிகளில் விளையாட்டு மைதானமே இல்லாத நிலையில், கைலாசநாதர் துவக்கப் பள்ளியில் விசாலமான விளையாட்டு மைதானம் இருந்தும் முறையான பராமரிப்பு இல்லாததால் சீரழிந்து வருகிறது. எனவே, கைலாசநாதர் துவக்கப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் வளர்ந்துள்ள பார்த்தீனியம் செடிகளை முழுமையாக அகற்றி, முறையாக பராமரிக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவியரின் பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை