காஞ்சியில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல் எச்சரிக்கை! ஏடிஸ் கொசுப்புழுவை கட்டுப்படுத்த உத்தரவு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், 100க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுள்ள நிலையில், மேலும் பலர் பாதிப்பு உள்ளாகும் நிலை உள்ளதால், முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக, உள்ளாட்சிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுவத்துவதோடு, 'ஏடிஸ்' கொசுப்புழுவை கட்டுப்படுத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒரு அரசு தலைமை மருத்துவமனை, ஐந்து தாலுகா அரசு மருத்துவமனைகள், திருப்புட்குழி, பரந்துார், மதுரமங்கலம், மானாம்பதி, படப்பை ஆகிய வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் என, பல்வேறு மருத்துவமனைகள் உள்ளன. தவிர, 100க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. இந்த மருத்துவமனைகளில், சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பல்வேறு விதமான நோய்களுக்கு கிராமம் மற்றும் நகரத்தில் வசிக்கும் மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த வரிசையில், டெங்கு காய்ச்சலுக்கும் தனி வார்டு அமைத்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குறிப்பாக, டெங்கு காய்ச்சலுக்கு காரணமான 'ஏடிஸ்' கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த நகர்ப்புற உள்ளாட்சிகள் மற்றும் ஊரக உள்ளாட்சிகளில், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், வீடு, வீடாக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். எனினும், பருவ நிலை மாற்றத்தால், டெங்கு ஏடிஸ் கொசு உற்பத்தி கட்டுப்படுத்த முடியாமல், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகங்களில் திணறி வருகின்றனர். இதனால், காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொந்தரவுகள் மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர், 50க்கும் மேற்பட்டோர் உள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர். எனினும், தனியார் மருத்துவமனைக்கு செல்வோர், 100க்கும் மேற்பட்டோர் உள்ளனர் என, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர். டெங்கு காய்ச்சல் தீவிரமடைவதற்கு முன், உள்ளாட்சி நிர்வாகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பு நடவடிக்கை எடுக்கலாம் என, சுகாதார துறையினர் உள்ளாட்சி பிரதிநிதிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தவிர, டெங்கு பரப்பு 'ஏடிஸ்' கொசுப்புழுவை கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தி உள்ளனர்.