கதவை திறக்காத மனைவி காதல் கணவன் தற்கொலை
நாகர்கோவில்:நள்ளிரவில் வீட்டுக்கு வந்தபோது மனைவி கதவை திறக்காததால், மனமுடைந்த காதல் கணவன், வீட்டு வாசலில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே குருமாத்துாரை சேர்ந்தவர் சரண்யா, 40. இவரது கணவர் ரஞ்சித் குமார், 42. இருவரும் வக்கீல்கள். காதல் திருமணம் செய்த தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர். போதைக்கு அடிமையான ரஞ்சித்குமார், மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து, வீட்டை விட்டு செல்வது வழக்கம்.சில நாட்களுக்கு முன் இதேபோல் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. நேற்று முன்தினம் சரண்யா, குழந்தைகளுடன் வீட்டில் துாங்கிய போது, நள்ளிரவில் வீட்டு கதவை ரஞ்சித்குமார் தட்டியுள்ளார். சரண்யா திறக்கவில்லை. நேற்று காலை, சரண்யா கதவை திறந்த போது, ரஞ்சித்குமார் வாசலில் துாக்கிட்டு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ந்துள்ளார். அவரது சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.