டிவி சேனல் மாற்றிய தகராறில் மனைவி கொலை: கணவன் கைது
நாகர்கோவில் : 'டிவி' சேனல் மாற்றும் தகராறில், மனைவியை கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம், கரிஞ்சான் கோட்டையை சேர்ந்தவர் பழனி, 56; தச்சர். இவரது மனைவி கஸ்துாரி, 53. இவர்களுக்கு, சரண்யா, 27, என்ற மகளும், சச்சின் குமார், 26, என்ற மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, மதுபோதையில் பழனி வீட்டுக்கு வந்தபோது, கஸ்துாரியின் தம்பி ராஜேந்திரன், 45, வீட்டில் 'டிவி'யில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தார். அதை பார்த்த பழனி, தனக்கு கிரிக்கெட் பிடிக்காது எனக்கூறி, வேறு சேனல் மாற்றியுள்ளார். கோபமடைந்த ராஜேந்திரன் வீட்டில் இருந்து வெளியேறினார். இதில், ஏற்பட்ட தகராறில் கஸ்துாரியை, பழனி கத்தியால் இடுப்பில் குத்தினார். படுகாயமடைந்த கஸ்துாரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இரணியல் போலீசார் பழனியை கைது செய்தனர்.