உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / துவங்கியது வடகிழக்கு பருவமழை நிழற்கூடங்களை சீரமைக்க வலியுறுத்தல்

துவங்கியது வடகிழக்கு பருவமழை நிழற்கூடங்களை சீரமைக்க வலியுறுத்தல்

கரூர்,வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட, பழுதடைந்துள்ள பெரும்பாலான நிழற்கூடங்களை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.கரூர் மாவட்டத்தில் பிரதான தொழிலாக ஜவுளி உற்பத்தி, கொசுவலை உற்பத்தி மற்றும் பஸ் பாடி கட்டுமான தொழில் போன்றவை ஜரூராக நடந்து வருகிறது. இதனால், கரூர் மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நாள்தோறும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், கரூருக்கு பல்வேறு வேலை நிமித்தமாக வந்து செல்கின்றனர்.குறிப்பாக, திருச்சி செல்லும் சாலையில் உள்ள சுக்காலியூர், புலியூர், வீரராக்கியம், மணவாசி, மாயனுார், கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை பகுதிகளில் இருந்து நிறைய தொழிலாளர்கள் பஸ்கள் மூலம் கரூர் வந்து செல்கின்றனர். ஆனால், கரூர்-திருச்சி நெடுஞ்சாலையில் முக்கிய இடங்களில் பயணிகள் நிற்க வசதியாக நிழற்கூடம் அமைக்கப்பட்டது. ஆனால், பல இடங்களில் அமைக்கப்பட்ட நிழற்கூடங்களின் மேற்கூரை சேதம் அடைந்துள்ளது.பயணிகள் உட்கார அமைக்கப்பட்ட சீட்கள் கழன்றும், காணாமலும் போய் விட்டன. இதனால், பயணிகள் மழை மற்றும் வெயிலுக்கு நிழற்கூடத்தில் உட்கார முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. எனவே, பொது மக்கள் நலன் கருதி கரூர்--திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பழுதடைந்துள்ள நிழற்கூடங்களை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட கிராம பஞ்சாயத்து அமைப்புகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி