அரசு பள்ளி மாணவனுக்குஊக்கத்தொகை வழங்கல்
அரவக்குறிச்சி:மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மூலம், இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் பொருட்டு, எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, 'இன்ஸ்பயர் அவார்ட்' என்ற போட்டியை நடத்துகிறது. இதில், மாணவர்கள் தங்கள் புதுமை கண்டுபிடிப்புகளை, அரசுக்கு பள்ளியிலிருந்து பதிவு செய்தல் வேண்டும். மாவட்ட அளவில் போட்டி நடத்தப்பட்டு, மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர். மாநில அளவில் தேர்வு செய்யப்படுபவர், தேசிய அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு அரசு பரிசு வழங்குவதோடு, காப்புரிமையும் பெற்று தருகிறது. அதன்படி, 2024--25ம் ஆண்டிற்கு, தமிழகத்தில், 1,197 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, எட்டாம் வகுப்பு மாணவர் எட்வின் நிஷாந்த் ராஜ், கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான எச்சரிக்கை தரக்கூடிய கண்ணாடியை தயாரித்துள்ளார். அரவக்குறிச்சி பேரூராட்சி தலைவர் ஜெயந்தி மணிகண்டன், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு சென்று, மாணவனிடம் கண்ணாடி தயாரிக்கப்பட்ட விதத்தை கேட்டறிந்து, ஊக்கத்தொகை வழங்கினார். தலைமை ஆசிரியர் சாகுல் அமீது, பட்டதாரி ஆசிரியர் ஷகிலா பானு ஆகியோர் உடனிருந்தனர்.