க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அவசியம் தேவை
கரூர், க.பரமத்தி பகுதியில், தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில், 30 பஞ்சாயத்துகள் உள்ளன. அதில், 400க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. க.பரமத்தியில் அரசு அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், கிரஷர் தொழில், கல் குவாரிகளில் வெடி மருந்து பொருள்கள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதியில் கட்டுமான பணிகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.க.பரமத்தி வழியாக கரூர், கோவைக்கு ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. க.பரமத்தியில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டாலோ, விபத்து நடந்தாலோ கரூர் அல்லது அரவக்குறிச்சி அல்லது வேலாயுதம்பாளையம் ஆகிய இடங்களில் இருந்து தான் தீயணைப்பு வாகனங்கள் வர வேண்டியுள்ளது. இதில் கரூர் தீயணைப்பு நிலையம், 18 கி.மீ., தொலைவிலும், அரவக்குறிச்சி தீயணைப்பு நிலையம், 28 கி.மீ., தொலைவிலும், வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையம், 20 கி.மீ., தொலைவிலும் உள்ளன. தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் பலத்த சேதம் ஏற்பட்டு விடுகிறது.கடந்த ஆண்டுகளில், காருடையாம்பாளையம் அருகே தனியார் பஞ்சு மில் தீப்பற்றி எரிந்து முற்றிலும் சாம்பலானது. இதே போல பல தீ விபத்து சம்பவங்களும் இப்பகுதியில் அடிக்கடி நடக்கின்றன. எனவே, க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.