வேளாண்மையில் சிறப்பாக செயலாற்றும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கும் திட்டம்
அரவக்குறிச்சி,:சிறுதானியங்கள் மற்றும் பயறு வகை பயிர்களில், மாநில அளவில் அதிக உற்பத்தி அடை யும் விவசாயிகளுக்கு ரொக்க பரிசு வழங்கும் திட்டம், மாநில வேளாண்மை வளர்ச்சித்திட்டம் மூலம் அரவக்குறிச்சி வட்டாரத்தில், 2025-26ம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.இத்திட்டத்தின் கீழ், மாநில அளவில் கம்பு மற்றும் பச்சை பயறு பயிர்களில் அதிகளவில் விளைச்சல் பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக, 2.50 லட்சம் ரூபாய், இரண்டாவது பரிசாக, 1.50 லட்சம் ரூபாய், மூன்றாவது பரிசாக, 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும். பயிர் விளைச்சல் போட்டிக்கான கடைசி தேதி, 2026 மார்ச் 15ம் தேதி என காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விவசாயிகள் குறைந்தபட்சம், 5 ஏக்கரில் கம்பு அல்லது பச்சை பயறு சாகுபடி செய்யப்பட்டிருக்க வேண்டும். அதில், 50 சென்ட் பரப்பளவில் உள்ள பயிர் போட்டிக்காக அறுவடை செய்யப்பட வேண்டும். போட்டியில் நில உடமைதாரர்கள், நில குத்தகைதாரர்கள் பங்கு பெற தகுதி உடையவர்கள். போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள், நுழைவு கட்டணமாக, 150 ரூபாய் செலுத்தி உரிய விண்ணப்பத்துடன் சிட்டா மற்றும் அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் அதிகபட்சம் அறுவடைக்கு, 30 நாட்களுக்கு முன், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பயிர் அறுவடையானது, மாநில அளவிலான பயிர் விளைச்சல் நடுவர் குழு முன்னிலையில் நடத்தப்பட்டு, வரையறுக்கப்பட்ட ஈரப்பதத்துடன் கூடிய விளை பொருட்களின் மகசூல் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முதல் மூன்று இடம் பெறும் விவசாயிகளுக்கு ரொக்க பரிசு வழங்கப்படும்.கூடுதல் விபரம் பெற, அரவக்குறிச்சி வட்டார விவசாயிகள், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜா அல்லது அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.